வானத்தில் பறந்த தங்கப் பறவை!
ஒருநாள் முல்லா ஒரு காட்டு வழியாக வெளியூருக்குச் சென்று கொண்டிருந்தார். வழியில்
ஒரு முரடனிடம் அவர் சிக்கிக் கொண்டு விட்டார்.
அந்த முரடனுக்கு முல்லாவைப் பற்றியும், அவருக்கு இருக்கும் புகழைப் பற்றியும்
நன்றாகத்
தெரியும்.
அவரை அவமானப்படுத்த எண்ணிய முரடன் தன் கைவாளை உருவிக் கொண்டு " முல்லா அவர்களே
உம்மைப் பெரிய மேதாவி என்றும் எவ்வளவு பெரிய ஆபத்து ஏற்பட்டாலும் உம்முடைய
அறிவினாலேயே தப்பிப் பிழைப்பீர் என்றும் பேசிக் கொள்கிறார்களே அது உண்மைதானா?"
என்று கேட்டான்.
" மக்களுக்குப் பொய்பேசத் தெரியாது.. அவர்கள் உண்மையைத்தான் பேசுகிறார்கள்" என்றார்
முல்லா.
" அப்படியானால் உமது அறிவுச் சாதுரியத்தை நிரூபித்துக் காண்பியும் பார்க்கலாம். இதோ
இந்த உடை வாளால் உமது கழுத்தை வெட்டப் போகிறேன், உம்மால் தப்பிப் பிழைக்க முடியுமா
?" என்று முரடன் கேட்டான்.
" உம்முடைய கைவாளுக்குத் தப்பிப் பிழைக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை"
என்று கூறிய முல்லா திடீரென வானத்தைப்பார்த்து விட்டு மகிழச்சியுடன் சிரித்தார்.
" என்ன சிரிக்கிறீர் " என்று முரடன் கேட்டான்.
" அன்பரே, உமது கைவாள் எனது தலையைத் துண்டிக்கும் முன்பு அதோ வானத்திலே கண்களைப்
பறிக்கும் அழகுடன் சிறகுகளை அசைத்துப் பறக்கும் அந்த வினோதமான தங்கப் பறவையை ஆசை
தீரப் பார்த்து விடுகிறேன். அதற்குப் பிறகு நீர் எனது தலையை வெட்டி விடலாம் "
என்றார் முல்லா.
" தங்கப் பறவையா வானத்தில் பறக்கிறது?" என்ற முரடன் வியப்புடன் ஆகாயத்தை அண்ணாந்து
நோக்கினான்.
முல்லா குபீரெனப் பாய்ந்து முரடன் கையிலிருந்த வாளைத் தட்டிப் பறித்து விட்டார்.
" நண்பனே, உம்முடைய உயிர் என் கையில் இருக்கிறது. நான் நினைத்தால் உமது தலையை வெட்டி
வீழ்த்திவிட முடியும் " என்றார் முல்லா.
" முல்லா அவர்களே நீர் வெற்றி பெற்றுவிட்டீர் என்னை மன்னிக்க வேண்டும்" என்று முரடன்
தாழ்ந்து அவரை வணங்கினான்.
" அன்பனே, கடவுள் சித்தமில்லாமல் எந்த உயிரையும், யாரும் அழித்துவிட முடியாது என்பதை
உணர்ந்து கொள்ளும் " என்று கூறி வாளை முரடனிடம் கொடுத்து விட்டு முல்லா தன்வழி
நடந்தார்.
கப்பலில் வேலை
முல்லா நஸ்ருதின் கப்பலில் வேலை கேட்டு விண்ணப்பித்து இருந்தார் .அவர்
நேர்காணலுக்கு அழைக்கப்பட்டார் .அவரிடம் நேர்முகத் தேர்வு நடத்தியவர்
கேட்டார் “புயல் வருமானால் என்ன செய்வீர் ?என்று .
அவர் சொன்னார் “நங்கூரத்தை நாட்டுவேன் “என்று “முன்னைவிட பெரியதாய் இன்னொரு புயல் வருகிறது அப்போது நீர் என்ன செய்வீர் ?”
“நான் இன்னொரு நங்கூரத்தை நாட்டுவேன் “என்றார் அவர் .இப்படி அது சென்று கொண்டு இருந்தது .
“…பத்தாவது புயல் !”
நஸ்ருதின் சொன்னார் “நான் இன்னொரு நங்கூரத்தை நாட்டுவேன் “
அந்த மனிதர் கேட்டார் .”ஆனால் இத்தனை நங்கூரத்தை நீர் எங்கிருந்து பெறுவீர் ?”என்று
அதற்கு நஸ்ருதின் சொன்னார் .”தாங்கள் எங்கிருந்து புயல்களை பெறுவீர்களோ அங்கிருந்துதான் “
மலிவான பொருள்
ஓரு தடவை துருக்கி மன்னர் - காட்டுக்கு வேட்டையாடச் சென்றார். அவருடைய பரிவாரத்துடன்
முல்லாவும் சென்றார். மன்னர் பரிவாரத்துடன் சமையல்காரர் குழு ஒன்றும் சென்றது.
சமையல்கார குழுவின் தலைவன் காட்டில் கூடாரமடித்து சமையல் செய்வதற்கான ஏற்பாடுகளில்
முனைந்தபோது அரண்மனையிலிருந்து உப்பு எடுத்து வர மறந்து விட்டது தெரிந்தது.
சமையற்காரத் தலைவன் மன்னர் முன் சென்று அச்சத்தோடு தலை கவிழ்ந்து நின்றான்.
" என்ன சமாச்சாரமஞ் என்று மன்னர் விசாரித்தார்.
சமையல் குழுத்தலைவன் நடுங்கிக்கொண்டே தான் உப்பு எடுத்து வர மறந்துவிட்ட செய்தியைச்
சொன்னான்.
மன்னர் சமையல் குழுத் தலைவனைக் கடுமையாகக் கண்டித்தார். பிறகு தனது வீரர்களில்
ஒருவனை அழைத்து நீ குதிரை மீதேறி அண்மையிலிருக்கும் கிராமத்திற்குச் சென்று யார்
வீட்டிலாவது கொஞ்சம் உப்பு வாங்கிவா என உத்திரவிட்டார்.
அப்போது முல்லா முன்னால் வந்து மன்னரை வணங்கினார்.
" என்ன முல்லா ஏதாவது சொல்ல வேண்டுமா?" என்று கேட்டார் மன்னர்.
ஆமாம் மன்னவா படை வீரனிடம் கொஞ்சம் காசு கொடுத்து அனுப்புங்கள், குடிமக்களிடம் உப்பு
இனாமாகக் கேட்க வேண்டாம் என்றார் முல்லா.
ஏன் குடிமக்கள் ஒரு கை உப்பை இலவசமாகக் கொடுக்க கூட முடியாத நிலையில்
இருக்கிறார்களா என மன்னர் ஆச்சரியந்தோன்றக் கேட்டார்.
மன்னர்பெருமானே நான் சொன்னதன் உட் பொருளைத் தாங்கள் விருப்பம் அறிந்தால் மக்கள் ஒரு
மூட்டை உப்புகூட இனாமாகக் கொடுப்பார்கள். ஆனால் மக்களுக்கு உங்கள்மீது இருந்த
மரியாதை போய்விடும் என்றார் முல்லா.
" ஏன்?" என்று கேட்டார் மன்னர்.
ஏன்ன காரணத்தினால் நாம் உப்பு கேட்கிறோம் என்று மக்களுக்குத் தெரியாது. உப்பு
மிகவும்
மலிவான பொருள். பரம ஏழை வீட்டிலும் உப்புக்குப் பஞ்சமிருக்காது. மன்னரிடம் உப்பு
இல்லாமல் இல்லை. உப்பு கேட்கிறார் என்றால் அந்த அளவிற்கு அவர் நிலை கேவலமாகிவிட்டது
என்று தான் மக்கள் உங்களைப்பற்றி நினைப்பார்கள். பின்னர் அவர்கள் உங்களை எவ்வாறு
மதிப்பார்கள்? அதனால் நமக்குத் தேவையான உப்பின் விலை மதிப்புக்கு அதிகம் பொருளை
உப்பு தருபவருக்கு கொடுத்துவிட்டு உப்பை வாங்கிவரச் சொல்லுங்கள் என்றார் முல்லா.
அவர் சொன்ன தத்துவம் சரிதான் என்று துருக்கி மன்னருக்குத் தோன்றியது. ஆகவே பணம்
கொடுத்தே உப்பை வாங்கிவருமாறு படை வீரனுக்கு உத்தரவிட்டார்.
தத்துவஞானியிடம் வேடிக்கை
முல்லாவின் ஊருக்கு ஓரு தத்துவ ஞானி வந்தார் ஒவ்வொரு நாளும் மாலையில் பொதுமக்கள்
அடங்கிய ஒரு கூட்டத்தில் தத்துவ ஞானி சொற்பொழிவாற்றினார்.
ஓருநாள் தத்துவ ஞானி சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த போது கீழக்கண்டவாறு ஒரு
தத்துவத்தைக் கூறினார்.
இறைவன் சிருஷ்டியில் எல்லா உயிர்களுமே சமந்தான். நாம் மற்ற மனிதர்களை மட்டுமின்றி
மிருகங்கள் போன்ற உயிரினங்களையும் நமக்குச் சமமாக பாவித்து அன்புடன் நடத்த வேண்டும்.
அந்தக் கூட்டத்தில் முல்லாவும் இருந்தார். தத்துவ ஞானியிடம் ஒரு வேடிக்கை செய்ய
நினைத்தார்.
உடனே அவர் எழுந்து " தத்துவ ஞானி அவர்களே, நீங்கள் கூறும் கருத்து அவ்வளவு
சரியல்ல என்று எனக்குத் தோன்றுகிறது" என்றார்.
" இதை எந்தக் கண்ணோட்டத்தில் கூறுகிறீர். நீர் உமது வாழ்க்கையில் ஏதாவது சோதனை செய்து
பார்த்தீரா?" என்று தத்துவஞானி கேட்டார்.
" சோதனை செய்து பார்த்த அனுபவம் காரணமாகத்தான் இந்தக் கருத்தை கூறுகிறேன் " என்றார்
முல்லா.
" என்ன சோதனை செய்தீர்? அதை விளக்கமாகக் கூறும் " தத்துவ ஞானி கேட்டார்.
" நான் என்னுடைய மனைவியையும் என் வீட்டுக் கழுதையும் சரி சமமாக நடத்தினேன் "
என்றார்.
" அதன் விளைவு என்ன?" என்று தத்துவ ஞானி கேட்டார்
" எனது பரிசோதனையின் விளைவாக ஒரு நல்ல கழுதையும், கெட்ட மனைவியும் கிடைத்தாள்
" என்று சொன்னார்.
இதைக் கேட்டதும் தத்துவ ஞானி உட்பட அனைவரும் வாய் விட்டுச் சிரித்தனர்.